பக்கங்கள்

வெள்ளி, 19 ஜூலை, 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 5801-5810

5801.
என்றவுடன் யாக்கோபு தாள்பணிந்து எழிலான வார்த்தையது கூறும்போது
சென்றுமே யாக்கோபு தன்னைக்கண்டு சிறப்புடனே சுன்னத்து செய்துமல்லோ
தின்றிடவே ரொட்டியது தானுமீய்ந்து சிறப்புடனே யசேனுசேன் என்றுகூறி
வென்றிடவே யுபதேச பிரணவத்தை விருப்பமுடன் மலுங்குமார் ஓதினாரே
5802.
ஓதவே நபிநாயர் கூட்டத்தார்கள் வுத்தமர்கள் மனம்போலே மனதுவந்து
நீதமுடன் மக்கபுரி கோட்டைக்குள்ளே நிஷ்களங்க பக்கிரியாக் கோபுதன்னை
தோதமுடன் கொண்டுசென்றார் அரண்மணைக்குள் தோறாமல் கொத்துமா யோதினார்கள்
வீதமது பயனறிந்த சித்துதாமும் விடுபட்டு வந்ததொரு யாக்கோபாச்சே
5803.
ஆச்சப்பா யின்னமொரு வயனம்சொல்வேன் வப்பனே கொங்கணவர் வயதுமார்க்கம்
பாச்சலுடன் எண்ணூறு வாண்டுமட்டும் பாரினிலே இருந்ததொரு சித்துமாகும்
மாச்சலுடன் சமாதிமுகஞ் சென்றசித்து மகத்தான கொங்கணவர் சித்துமாகும்
ஓச்சலது இல்லாமல் வுலகுதன்னில் வுத்தமனே வெகுகாலம் வுழன்றசித்தே
5804.
சித்தான சித்துமுனி ரிஷிகள்தாமும் சிறப்பான கொங்கணவர் காண்டஞ்சொல்லி
முத்தான கடைக்காண்டம் மூன்றுஞ்சொல்லி மூதுலகில் சமாதிக்கு ஏகலானார்
பத்தியுடன் கடைக்காண்டம் நூலிலப்பா பாடிவைத்தார் வெகுசங்கைக் காணப்போமோ
புத்தியுள்ள மாண்பர்களும் காண்பாரப்பா கண்டாலும் மதிசங்கை யின்னமுண்டே
5805.
உண்டான கடைக்காண்டம் பாடியல்லோ வுத்தமனுங் கொங்கணவர் முனிவர்தானும்
நண்பான வையத்தில் மாண்பர்முன்னே நலமான ரிஷிமுனிவர் தனையழைத்து
வண்பான சாத்திரங்கள் பாடியல்லோ வளமுடனே வெகுசித்தர் மறைத்துவைத்தார்
திண்ணமுடன் காயாதி கற்பங்கொண்டு தீரமுடன் சமாதிக்குச் சொல்வேன்தானே
5806.
சொல்லவே சமாதிமுகம் நின்றபோது செம்மலுடன் சீஷவர்க்கம் அனேகங்கோடி
மெல்லவே சமாதிக்கு இடமுந்தேடி மேன்மையுடன் வழிபாடு செய்துமல்லோ
புல்லவே கொங்கணனார் முனிவர்தானும் புகழான சமாதிமுகம் வுள்ளேசென்று
வல்லமையாய் முப்பது வாண்டுதானும் வளமுடனே இருந்த சித்துதானே
5807.
தானான யின்னமொரு வயனஞ்சொல்வேன் தாக்கான கண்மணியே புகலக்கேளு
கோனான தட்சணா மூர்த்தியப்பா குவலயத்தில் வெகுகால மிருந்தசித்து
மானான வயததுவும் ஏதென்றாக்கால் மகத்தான வாயிரத்து சொச்சமப்பா 
பானான படியேழு கடலுஞ்சுத்தி பாரினிலே வுழன்றதொரு சித்துகாணே
5808.
காணவே தட்சணா மூர்த்தியாகும் காசினியில் திருமந்திரம் பாடினோர்தான்
பூணவே சிவாலயந் தன்னிலப்பா பொங்கமுடன் வெகுகால மிருந்தசித்து
தோணவே திருமந்திரம் பாடியல்லோ தோற்றமுடன் சமாதிக்கு யேகவெண்ணி
ஆணவங்கள் தானொடுங்கி சித்துதாமும் வண்பான காசிபதி சென்றிட்டாரே
5809.
சென்றாரே நற்மதா நதியின்பக்கல் சிறப்புடனே தட்சணா மூர்த்திநாயர்
குன்றான கரையோரம் மண்டபந்தான் கொற்றவனார் சமாதிமுகஞ் சென்றுமல்லோ
வென்றிடவே ஒருயுகமாம் அறுபதாண்டு வுத்தமனார் தானிருந்து வந்தசித்து
தென்றிசையில் தட்சணா மூர்த்தியென்று தேசமதில் பேர்கொண்ட சித்துபாரே
5810.
பாரேதான் இன்னமொரு மார்க்கஞ்சொல்வேன் பாங்கான பாலகனே பகரக்கேளு
நீரேதான் கோரக்கர் வயதேதென்றாக்கால் நிஷ்களங்க மாகவல்லோ மாயாசித்து
சேரேதான் வயததுவும் எண்பதாகும் செப்பினார் அவர்நூலில் சூத்திரந்தான்
சீரேதான் பதினாறு சூத்திரத்தில் சிறப்பாகப் பாடிவைத்த துண்மையாமே

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 5811-5820

5811.
உண்மையாங் குளிகையது தானுமில்லை வுத்தமனே நரைதிரையும் யாதொன்றில்லை
வண்மையாம் பிணியென்ற ரோகமில்லை வகுப்பான காயாதி தானுமில்லை
தண்மையுடன் வையகத்து மாண்பரெல்லாம் தப்பாமல் சிவயோகி என்பார்பாரு
திண்மையுடன் கோரக்கர் மூலிதம்மை தீர்க்கமுடன் எப்போதும் தின்பார்தானே
5812.
திண்பாரே கோரக்கர் மூலியாலே தீர்க்கமுடன் கோரக்கர் சித்துமாச்சு
வன்பாக சமுசார வாழ்க்கையில்லை வளமான பொருளின்மேல் ஆசையில்லை
என்னேரந் திரிகால பூசையோடும் எழிலான காவிக ஷாயத்தோடும்
சொன்னபடி மனோன்மணியாள் பிரணவத்தை தொல்லுலகில் யெப்போதும் சொல்வார்தானே
5813.
சொல்வாரே யின்னமொரு மார்க்கங்கேளு தூய்தான நற்பாலா தீரவானே
புல்லவே கௌபால சித்துதானும் புகழான வையகத்தில் இருந்தசித்து 
வல்லதொரு பொன்னுக்கு வாணிமாற்று வகுப்புடனே கண்டறிந்த ஞானசித்து
சல்லியமாம் வித்தைதனில் தேர்ந்தசித்து சட்டமுடன் வுரைகல்லுக் குரியசித்தே
5814.
உரையான பொன்னுரைக்கும் கல்லைத்தானும் வுத்தமனே மலைதனிலே கண்டுதேடி
திரையோடும் புரையகற்றி வயிரக்கல்லை திட்டமுடன் ஆராய்ந்த ஞானசித்து
வரையான சித்துக்கு வயதேதென்றால் வளமுடனே கூறுகிறேன் இன்னங்கேளு
கரைகண்ட சித்தல்லோ கெவனசித்து கௌபால சித்தென்று பேருண்டாச்சே
5815.
பேரான சித்துக்கு வயதேதென்றால் பெருமையுடன் கூறுகிறேன் கொற்றவர்கேள்
நேரான வயததுவும் இருநாற்றைந்து நெடிதான காடுமலை திரிந்தசித்து
ஊரோடுங் கூடியல்லோ உறவுபேசி வுகமையுடன் சாத்திரத்தை யறிந்தசித்து
சீரான கௌபால சித்தருக்கு சிறப்புடனே ஞானமென்ற தேசந்தானே
5816.
தேசமாம் உபதேசம் பெற்றுக்கொண்டு தேற்றமுடன் காயாதி கற்பங்கொண்டு
வாசமது மலைதனிலே இருந்துகொண்டு வகுப்பான சித்தரது வுளவாராய்ந்து
நேசமுடன் சமாதிக்கு ஏகவெண்ணி நெடுங்காலஞ் சீஷவர்க்க மாண்பரோடும்
பாசமொடு தனக்குகந்த சீஷனைத்தான் பட்சமுடன் கண்டறிந்து வுரைத்தார்தாமே
5817.
உரைத்தாரே சீஷவர்க்க சேதிதன்னை வுத்தமனே சமாதிக்குப் போரேனப்பா
வரையான சமாதிமுகஞ் சென்றபோது வளமுடனே எந்தனுக்கு வயிரக்கல்லால்
குறையாமல் சமாதிதனை மூடியல்லோ கொற்றவனே கருவயிரக் கல்லில்தானும்
மறைவாகக் கைநாட்டுச் சித்திரந்தான் மன்னவனே எழுத்துரையு மென்பார்தானே
5818.
என்றவுடன் கௌபால சித்துதாமும் எளிதான வயிரக்கல் மேலேயப்பா
வென்றிடவே எழுத்துமுகம் மாறியல்லோ மேதினியில் எல்லவர்க்கும் அறிவதற்கு
குன்றான கல்லின்மேல் எழுத்துவூன்றி கொற்றவனே கௌபாலர் சமாதியென்று
நன்றாக வரைதீட்டி சீஷர்தாமும் நலமுடனே சமாதிமுகஞ் செய்தார்பாரே
5819.
செய்யவே பதினான்கு வருஷமட்டும் செப்பரிய சமாதிமுகந் தனிலிருந்து 
பையவே வையகத்தில் வந்தசித்து பாங்குடனே ஏமமென்ற சித்துவாகும்
துய்யதமிழ் பண்டிதர்கள் போற்றுஞ்சித்து துறையான ஏமமாற் றறிந்தசித்து
வையகத்தில் சித்துமுனி ரிஷிகள்தேவர் வளமுடனே எவரறிந்தார் ஆணிதானே
5820.
ஆணியா மின்னமொரு வதிதஞ்சொல்வேன் வப்பனே புலிப்பாணி மைந்தாகேளு
நீணிலத்தில் ஜோதிமா முனிவர்தாமும் நீதியுடன் வெகுகால மிருந்தசித்து
வாணிபங்கள் செய்வதற்கு ஏமமாற்றை வளமுடனே கண்டறிந்த சித்துதாமும்
காணிகளும் பூமிவள மெல்லாங்கண்டு கருவயிரக் கல்லெடுத்த சித்துதானே

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 5821-5830

5821.
தானான சித்துக்கு வயதேதென்றால் தன்மையுள்ள வருடமது நானூறாகும்
பானான காடுமலை தன்முகத்தில் பாங்குடனே தான்திரிந்த சித்துவாகும்
கோனான குருக்கள்மார் ரிஷிகள்தம்மை கொற்றவனார் தான்கண்டு வுரவுபேசி
மானான பொன்மாற்று அறியவென்று மார்க்கமுடன் சென்றதொரு சித்துபாரே
5822.
பாரப்பா ஜோதியென்ற முனிவர்தானும் பட்சமுடன் சமாதிமுகம் வுள்ளேசென்று
சீரப்பா முப்பத்தா றாண்டுமட்டும் சிறப்புடனே வையகத்தை மறந்தசித்து
நேரப்பா தவசுநிலை தான்கடந்து நேர்மையுடன் சமாதிவிட்டு வந்தசித்து
ஆரப்பா அறிவார்கள் ஜோதிமார்க்கம் வப்பனே யானறிந்து சொல்லிட்டேனே
5823.
சொல்லவே யின்னமொரு மார்க்கம்பாரு தூய்தான பாலகனே என்னசொல்வேன்
வெல்லவே டமரகனார் வயதேதென்றால் வுத்தமனே முந்நூற்றுச் சொச்சமாகும்
புல்லவே நெடுங்காலம் வையகத்து புகழான மாண்பருடன் கூடியல்லோ
நல்லதொரு வதிஷ்டகரு வித்தையெல்லாம் நலமுடனே செய்ததொரு டமரர்காணே
5824.
காணவே ஜெகஜால டமரகந்தான காசினியில் அதீதவித்தை செய்தசித்து
பூணவே நீர்மேலே நடந்தசித்து புகழான வாசியை நடத்துஞ்சித்து
தோணவே கூடுவிட்டு கூடுபாய்ந்து தொல்லுலகில் வித்தைதனை செய்தசித்து
ஆணவங்கள் தானொடுங்கி காயந்தின்று வன்புடனே வீற்றிருந்த சித்துதாமே
5825.
தானான டமரகனார் ஆடுஞ்சித்து தகமையுள்ள சாத்திரத்திற் சொல்லவில்லை
கோனான வாகாயந் தன்னின்மட்டும் கொற்றவனார் கெடைகட்டி யாடுஞ்சித்து
பானான பரிதிமதி தன்னைத்தானும் பக்குவமாய்த் திசைமாற்றிச் செய்தசித்து
மானான டமரகனார் சமாதிதன்னில் மார்க்கமுடன் ஏகுதற்கு எண்ணினாரே
5826.
நண்ணவே சகலரிஷி சித்துதாமும் நலமுடனே வையகத்து சமாதிதன்னில்
மண்ணதனில் இருந்ததொரு சித்துமாச்சு மகத்தான வவர்போன்ற சித்துமல்ல
கண்ணவிந்த குருடனைப்போல் கேணிதன்னில் காசினியில் இறங்கியல்லோ சித்துதானும்
தண்ணீரில் பனிரெண்டு வாண்டுமட்டும் தன்மையுடன் வீற்றிருந்த சித்துதாமே
5827.
சித்தான சித்து ஜலஸ்தம்பனசித்து சிறப்பான டமரகர்போல் சொல்லொண்ணாது
முத்தான கேணிவிட்டு வந்தசித்து மூதுலகில் இவர்போலு மெங்குமுண்டோ
பத்தியுடன் வையகத்தில் அனந்தஞ்சித்து பாரினிலே வெகுமுனிவர் இருந்தாரல்லோ
சாத்திரங்கள் மறவாத சித்தானாலும் ஜலஸ்தம்பன சித்துபோ லில்லைதானே
5828.
இல்லையே இன்னமொரு கவிதைசொல்வேன் எழிலான எந்தனிட மணியேகேளும்
சொல்லவே சுந்தரா னந்தரப்பா தொல்லுலகில் கேசரியாம் வித்தைதன்னை
புல்லவே வதீதமென்ற மாண்பருக்கு புகழுடனே புகட்டியதோர் சித்துமாகும்
வெல்லவே யவர்தமக்கு வயதேதென்றால் வட்டகுறை தொட்டகுறை மிகுதியாமே
5829.
ஆமேதான் அவர்தமக்கு வயதுமெத்த வப்பனே எண்ணூற்று சொச்சமாண்டு
நாமேதான் சொன்னபடி குளிகைபூண்டு நலமான கேசரிமேல் சென்றசித்து
போமேதான் வையகத்தி லிருந்துமல்லோ பொங்கமுடன் சமாதிமுகஞ் சென்றசித்து
வேமேதான் இருபத்தா றாண்டுமட்டும் விடுபட்டு பூமிதனில் வந்தசித்தே
5830.
வந்ததொரு சித்துக்கு சமாதிமார்க்கம் வையகத்தில் மெத்தவுண்டு சொல்லொண்ணாது
சந்ததமாஞ் சீஷவர்க்கம் கோடிமாண்பர் தாரிணியில் கணக்குண்டோ லக்கோயில்லை
சொந்தமுடன் வெகுமாண்பர் கிட்டியல்லோ சுந்தரனார் பாதார விந்தந்தன்னை
அந்தமுடன் தாள்பணிந்து சிரங்குனிந்து வன்புடனே போற்றிசெய்த சித்துமாச்சே

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 5831-5840

5831.
ஆச்சப்பா புலிப்பாணி மைந்தாகேளு வன்புடனே சொல்லுகிறேன் வதீதமெத்த
மாச்சலென்ற வாரிஷியாஞ் சித்துதம்மை வளமுடனே சொல்லுகிறேன் வண்மைபாரு
பாச்சலென்ற வயததுவும் எழுநூற்றுச்சொச்சம் பாருலகில் நெடுங்கால மிருந்தசித்து
மூச்சடங்கி சிவயோக மானசித்து மூதுலகில் இவர்போலுங் காணார்தாமே
5832.
காணாரே தவசியென்ற வரரிஷியார்தானும் கருவாக காளிங்க மடுவுதன்னில்
வேணபடி தவயோகஞ் செய்யவென்று விட்டகுறை தனையகற்றி மடுவிற்சென்று
தோணவே பனிரெண்டு வாண்டுமட்டும் தொல்லுலகில் ஜலஸ்தம்ப சமாதியாகி
மாண்பரும் வையகத்தோர் காணவென்று மார்க்கமுடன் வந்ததோர் சித்துதானே
5833.
தானென்ற சித்ததுவும் ஜலரூபசித்து தாரணியில் இவர்போலுஞ் சித்துமுண்டோ
வானென்ற தேவாதி ரிஷிகள்தம்மால் வரத்தினால் பேருபெற்ற சித்தேயாகும்
கோனென்ற வரரிஷியார் என்றுசொல்லிக் கொற்றவர்க்குக் குவலயத்தில் பேருண்டாச்சு
மானென்ற சித்தர்களும் வணங்கியல்லோ மகத்தான ரிஷியாரைப் போற்றுவாரே
5834.
போற்றுவார் பூதலத்தார் எல்லாருந்தான் பொங்கமுடன் இன்னமொரு மார்க்கஞ்சொல்வேன்
தேற்றமுடன் வால்மீகர் என்றசித்து தெளிவான மார்க்கமது சொல்வேன்பாரீர்
மாற்றமயம் நீங்கியல்லோ வையகத்தில் வளமையுடன் வெகுகால மிருந்தசித்து
ஆற்றலுடன் வால்மீகர் ராமாயணத்தை அவனிதனில் மாந்தருக்கு செய்திட்டாரே
5835.
செய்ததொரு வால்மீகர் வயதேதென்றால் செப்பமுடன் எழுநூற்றுச் சொச்சமப்பா
துய்யதமிழ் பண்டிதனாங் கல்விவானாம் தூய்தான வகப்பேரு கொண்டசித்து
பையவே சமாதிமுகஞ் சென்றதில்லை பாங்குடனே காயாதி கொண்டுதானும்
வெய்யவே நெடுங்கால மிருந்தசித்து வேதாந்த வால்மீகர் தானுமாமே
5836.
தானான வையகத்து மாந்தர்க்கெல்லாம் தகமையுள்ள வால்மீகர் சரிகைதன்னை
கோனான குருவான வால்மீகர்தானும் குவலயத்தில் பேர்கொண்ட ஞானசித்து 
தேனான வைதீக சாத்திரங்கள் தெளிவுடனே கட்டிவைத்த ஞானசித்து
பானான பராசரிஷிக் கொப்பதான பாங்கான யடியென்று செப்பலாமே
5837.
செப்பலாம் இன்னமொரு மார்க்கங்கேளு செயலான புலிப்பாணி மைந்தாபாரு
ஒப்பமுடன் ஊர்வசியாள் வயதேதென்றால் வுத்தமனே நூற்றிரு பத்தேயாகும்
தப்பிதங்கள் நேராமல் தரணிமீதில் சாங்கமுடன் வீற்றிருந்த மாதுசித்து
இப்புவியில் ஊர்வசியாள் சுருக்கரத்னம் எழிலாகப் பாடிவைத்த மாதுதாமே
5838.
மாதான ஊர்வசியாள் காயகற்பம் மகத்தான வையகத்தில் உண்டுமல்லோ
தோதான காவியங்கள் என்றுகூறி தோறாமல் பாடிவைத்த மாதுசித்து
நீதான வியாசரிடம் உபதேசங்கள் நீதியுடன் பெற்றதொரு மாதுதானும்
கோதாவரி கரைதனிலே மடிந்தசித்து கொற்றவனே சமாதியது அங்கேவுண்டே
5839.
உண்டான சமாதியது மண்டபத்தில் ஓகோகோ நாதாக்கள் கண்டறிந்து
திண்பான வேதமாம் ஆயுர்வேதம் தீரமுடன் கண்டறிந்த மாதுசித்து
கண்டல்லோ ரிஷிமுனிவர் சித்துதானுங் காசினியில் பூசைமுதல் நைவேத்தியங்கள்
சண்டமா ருதம்போலே தானடித்து தாரணியில் கோடித்து வருகின்றாரே
5840.
வருகிறார் பூவாடை காரிசித்தை மார்க்கமா மின்னமொரு மகிமைகேளு
கருமமதை வையகத்தில் தானகற்றி காசினியில் நெடுங்கால மிருந்தசித்து
தருமமது தானறிந்த கமலசித்து தாரணியில் தானறிந்த கொடியசித்து
அருமையுடன் சீனபதி தேசந்தன்னில் வன்பாகச் சென்றதொரு சித்துபாரே

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 5841-5850

5841.
பாரேதான் கமலமுனி வயதேதென்றால் பாலகனே சொல்லுகிறேன் பண்பாய்க்கேளு
நேரேதான் வயததுவும் நாலாயிரந்தான் நேர்மையுடன் முந்நூற்றுச் சொச்சமாகும்
சீரேதான் சீனபதி தன்னிலப்பா சிறப்புடனே நெடுங்கால மிருந்தசித்து
தீரேதான் சமாதிமுகந் தன்னிற்சென்று தீர்க்கமுடன் இருநூறு வாண்டுதானே
5842.
ஆண்டான வருஷமது இருநூரப்பா வப்பனே பூமிதனி லிருந்தசித்து
கூண்டான கூண்டோடு வந்தசித்து குவலயத்தில் இவர்போலுஞ் சித்துமுண்டோ
தாண்டவம்போல் சீனபதி தேசந்தன்னில் சாங்கமுடன் வினோதங்கள் செய்தசித்து
ஆண்டகையாம் ஆனதொரு கமலர்தானும் வப்பனே வையகத்து சித்துமாச்சே
5843.
ஆச்சப்பா இன்னமொரு மகிமைசொல்வேன் வப்பனே யதிசயங்கள் மெத்தவுண்டு
மாச்சலுடன் வையகத்தில் இருந்தசித்து மகத்தான அறிவானந்த சித்துதானும்
பாச்சலுடன் வயததுவும் ஏதென்றாக்கால் பண்பான முந்நூற்று வறுபதாண்டு
மூச்சடங்கி சமாதிதனில் இருந்தசித்து மூர்க்கமுடன் பனிரெண்டு வருஷங்காணே
5844.
காணவே பனிரண் டாண்டுமட்டும் காசினியில் பூமிதனில் இருந்தசித்து
தோணவே கௌபாலர் சீஷனாகும் தொல்லுலகில் இவர்மகிமை மெத்தவுண்டு
பூணவே வையகத்து மாண்பருக்கு புகழாக முன்னடந்த காரியத்தை
வேணபடி சன்னதங்கள் கொண்டாற்போலே விட்டகுறை இருந்தபடி சொல்வார்பாரே
5845.
சொல்லவே யின்னமொரு மார்க்கங்கேளு தூய்தான வகப்பேயர் சித்துதாமும்
வெல்லவே யவர்தமக்கு வயதேதென்றால் விருப்பமுடன் சொல்லுகிறேன் வியனுந்தானும்
புல்லவே நூற்றுபத்து ஒன்றுமூன்று புகழான மரத்தடியில் இருக்குஞ்சித்து
நல்லதொரு சமாதிமுகஞ் சென்றதில்லை நாதாந்த அகப்பைவெளி சித்துதானே
5846.
வெளியான சித்துக்கு குருவேதென்றால் விருப்பமுடன் வியாசமுனி யென்னலாகும்
ஒளிவாக காயாதி தானுமில்லை ஓகோகோ வுலகமதில் வாழுஞ்சித்து
களியான ஜோதியென்ற விருட்சந்தன்னில் கைலாச நாதரைப்போல் சமாதிகொண்டு
வளியான மரப்பொந்தில் தானொடுங்கி மகத்தாக இருந்ததொரு சித்துமாச்சே
5847.
சித்தான சித்துனுட மார்க்கஞ்சொல்வேன் சீரான புலிப்பாணி மன்னாபாரு
முத்தான பாம்பாட்டி வயதேதென்றால் மூதுலகில் பெயர்கொண்ட நெடியசித்து
புத்தியுள்ள சித்துக்கு வயதுசொல்வேன் புண்ணியனே நூற்றிரு பத்துமூன்று
சுத்தமுடன் பாம்பினது விஷத்தைவாங்கி துப்புரவாய் அருந்துகிற சித்துகேளே
5848.
கேளேதான் காயாதி கற்பங்கொண்டு கீர்த்தியுடன் சிலகால மிருந்தசித்து
பாளேதான் போகாமல் தேகந்தன்னை பட்சமுடன் காப்பாற்றி பந்துகொண்டு
நீளேதான் திருவாத்தி மரத்தின்கீழே நீதியுடன் கொலுவிருந்த காயசித்து
ஆனேதான் கோகர்ண சித்துமல்ல வப்பனே சின்மயத்தின் சித்துபாரே
5849.
பாரேதான் இன்னமொரு மார்க்கம்பாரு பட்சமுள்ள எந்தனது பாலாகேளு
சீரேதான் காலகண்ட வயதேதென்றால் சிறப்பான வாயிரமா மிருநூறாண்டு
நேரேதான் நெடுங்கால மிருந்தசித்து நேர்மையுடன் குளிகையது பூண்டசித்து
ஊரேதான் பெயரேது சொல்லவென்றால் வுத்தமனே சேஷனால் முடியாதென்றே
5850.
அன்றான ஆதிசேடன் தன்னினாலும் வப்பனே கூறுதற்கு முடியாதப்பா
குன்றான நெடுமலைகள் வனாந்திரங்கள் கொற்றவனே நெடுங்கால மறிந்தசித்து
தென்றிசையில் தெட்சிணா மூர்த்தினாயன் சிறப்பான சித்துமகா சீஷனுக்கு
வென்றிடவே யுபதேசஞ் செய்தசித்து விட்டகுறை யிருந்ததொரு காலர்தாமே

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 5851-5860

5851.
காலனாம் நெடுந்தூத காலசித்து காசினியில் சமாதிமுகம் செல்வதற்கு
பாலகனாம் சீஷவர்க்க மாண்பர்தம்மை பட்சமுடன் தாமழைத்த சித்துதாமும்
சீலமுடன் முப்பத்து வாறுவாண்டு சிறப்புடனே வையகத்தில் இருந்தசித்து
கோலமுடன் முகமறியா பாலசித்து கொற்றவனே வெகுகால மிருந்தசித்தே
5852.
சித்தான சித்தனிட மார்க்கஞ்சொன்னேன் சிறப்பான இன்னமொரு வயனங்கேளிர்
முத்தான வடிவேலர் முருகரப்பா மயற்சியுடன் வயததுவும் ஏதென்றாக்கால்
சத்தியமாய் வயததுவுங் கணக்கோயில்லை சார்பான நூல்தனிலுஞ் சொல்லவில்லை
சித்திபெற ஞானவழி கொண்டசித்து சிறப்பான சுப்ரமணியர் என்னலாமே
5853.
என்னவே சிவசுப்பிர மணியரான யெழிலான சித்துக்கு வயதோயில்லை
பன்னவே பலசாஸ்திர நூல்கள்தன்னில் பாகமுடன் வயததுவுங் கூறவில்லை
சொன்னபடி சுருதிமுறை வேதாகமங்கள் தோற்றமுடன் பலபேரும் பாடிவைத்தார்
நன்னயமாய் சுப்பிரமணியர் காப்பேயென்று நாட்டினார் நூல்களெல்லாம் நாட்டினாரே
5854.
நாட்டினதோர் நாமமதைக் கண்டதல்லால் நாதாந்த வயததுவைக் கண்டதில்லை
தாட்டிகமாய் யின்னமொரு வயணஞ்சொல்வேன் தயாளமுள்ள சிறுபாலா சாற்றக்கேளிர்
வாட்டமுடன் யூகியென்ற முனிவர்தானும் வகுப்பான வயததுவும் ஏதென்றாக்கால்
மாட்டிமையாய் அறுநூற்று யெண்பதாண்டு மார்க்கமுடன் வையகத்து சித்துபாரே
5855.
பாரேதான் நீலகண்ட ரிஷியார்தம்மால் பாருலகில் உபதேசம் பெற்றசித்து
நேரேதான் சமாதிமுகந் தன்னிற்சென்று நேர்மையுடன் இருபத்தோர் ஆண்டுமட்டும்
தீரேதான் சமாதிமுகம் இருந்துமல்லோ தீர்க்கமுடன் வையகத்தில் வந்தசித்து
பேரேதான் நூல்தனிலே யூகியென்றும் பேருலகில் கீர்த்திபெற்ற சித்துதாமே
5856.
தாமான சாத்திரங்கள் அழிந்தசித்து தாரிணியில் நெடுங்கால மிருந்தசித்து
கோமான்கள் உபதேசம் பெற்றசித்து குவலயத்தில் இவர்போலும் யாருமுண்டோ
பூமான்க ளானதொரு மாண்பரெல்லாம் புகழ்ச்சியுடன் இவர்பாதம் புகழுஞ்சித்து
சாமான்ய மானதொரு சித்துபோல சட்டமுடன் வையகத்திற் காணார்தாமே
5857.
தானான இன்னமொரு மார்க்கஞ்சொல்வேன் தகமையுள்ள பூபாலா மணியேகேளிர்
பானான திரணாக்கிய முனிவர்தானும் பாருலகில் நெடுங்கால மானசித்து
கோனான வயததுவும் ஏதென்றாக்கால் கொற்றவனே துலாயிரத்து எண்பதாண்டு
மானான சமாதிமுகஞ் சென்றசித்து மார்க்கமுடன் இருபத்தி ரண்டுதானே
5858.
ஆண்டான வருஷமது இருபத்திரண்டு வப்பனே சமாதிமுகம் இருந்தசித்து
பாண்டவர்கள் ஐவருங் காணாமுன்னே பாருலகில் வெகுகால மிருந்தசித்து
தாண்டவம்போல் ஜெமதக்கினி முனிவர்தானும் தாரிணியில் பெற்றெடுத்த சித்துவாகும்
மாண்டதொரு மாண்பரெல்லாம் வையகத்தில் வாழ்த்தியல்லோ வஞ்சலிகள் செய்தசித்தே
5859.
சித்தான சித்துமுனி இவர்தானப்பா சீருலகில் ரிஷிவர்க்கக் கூட்டத்தோடு
முத்திபெற நல்வழிக்கு உறுதிகொண்டு மூதுலகில் சின்மயத்தை மனதிலுன்னி
சத்தியுடன் மனோன்மணியை தியானித்தேதான் சதாகால நிஷ்டைகுறி களங்கனாதி
புத்தியுடன் வையகத்தில் தவசியாகி பொன்னுலகு பதிதனிலே சேர்ந்தார்காணே
5860.
சேரவே யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் செம்மலுடன் புலிப்பாணி மைந்தாகேளு
வாரமுடன் சண்டீசுவரர் வளமைகேளும் வண்மையுடன் வயததுவும் ஏதென்றாக்கால்
தீரமுடன் நானூற்றி யறுபதாகும் தீர்க்கமுடன் அவர்நூலில் சொன்னநீதி
சாரமுடன் சமாதிமுகஞ் சென்றசித்து சாங்கமுடன் வையகத்து சித்துகாணே