பக்கங்கள்

திங்கள், 8 ஜூலை, 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 6711-6720

6711.
கண்டதொரு நாதாந்த சித்துதாமும் கனமுடனே யுந்தனைத்தான் போற்றுவார்கள்
மண்டலத்து ராஜாதி ராஜர்தாமும் மகாவீர னென்றல்லோ மதிப்பார்தாமும்
கொண்டல்வண்ணன் அச்சுதனார் கிருஷ்ணாவதாரன் குவலயத்தில் கொண்டதொரு குளிகையென்பார்
தெண்டிரை சூழ்மாண்பரெல்லாம் உம்மையல்லோ தேர்ந்ததொரு சித்துமுனி என்பார்பாரே
6712.
பாரேதான் வீரமென்ற குளிகைதன்னை பாங்குடனே தானெடுத்துப் பகரக்கேளு
நேரேதான் ஆவினது முதுகின்பேரில் நேர்மையுடன் தான்வைக்கப் பால்கொடாது
சீரேதான் வீரமணி யாட்டந்தன்னால் சிறப்பான பாலதுவுஞ் சுவறிப்போகும்
நீரேதான் மணியதனை எடுத்தாயானால் நிஷ்களங்க மானபால் சுரக்கும்பாரே
6713.
சரக்குமே மணியதனை எடுத்துபாலா சுந்தரனே சொல்லுகிறேன் சூட்சம்பாரு
இரக்கமுடன் உன்மீதில் மனதுவந்து எழிலான மணியினது பூட்டகத்தை
திறக்கவே மணியென்ற வண்மைதன்னை தீர்க்கமுடன் புகலுகிறேன் தின்னம்பாரு
பறக்கவே வாயுவேகந் தன்னைப்போலே பாரினிலே வாயிலிட்டு நடக்கலாமே
6714.
நடக்கவே செந்தூரம் நெடுங்காலந்தான் நடராஜ சுந்தரனே நவில்வேனப்பா
அடக்கமுடன் குளிகைதனை வாயிலிட்டு அவனியெலாம் நடந்தாலும் அசைந்திடாது
படம்வரையும் மாதர்தனைப் புனர்ந்திட்டாலும் பகரவே கூடாது லீலாவண்ணம்
சடமதுவும் தோன்றாது யுந்தமக்கு சட்டமுடன் குளிகைதனைக் கொள்வீர்தாமே
6715.
கொள்ளவே யின்னமொரு போக்குசொல்வேன் குணமான புலிப்பாணி கேந்திராகேள்
எள்ளளவும் பிசகாது இந்தபாகம் எழிலான வீரமணி வேதையப்பா
விள்ளாதே யொருவருக்கும் இந்தபாகம் விட்டகுறை இருந்ததினால் உந்தமக்கு
கள்ளமது வாராமல் மனதுவந்து கண்மணியே கடாட்சித்தேன் பண்புதானே
6716.
பண்பான வீரமணி தனையெடுத்து பார்வேந்தா வெள்வங்கஞ் சேர்தானப்பா
திண்ணமுடன் தானுருக்கி குகையிலிட்டு தீரமுடன் வீரமணி தனையெடுத்து
அண்ணலார் பதம்போற்றி யடிபணிந்து வப்பனே குளிகையது எடுத்துமைந்தா
வண்ணமுடன் வங்கமது வுருகும்போது வளம்பெறவே குளிகைதனைப் பொதிந்திடாயே
6717.
பொதியவே நீருண்டு மேலெழும்பி பொங்கமுடன் மணியதுவும் தெறிக்கும்பாரு
மதிபோன்ற வெள்ளியது என்னசொல்வேன் மகத்தான வெள்ளீயம் நீர்தானேகி
துதிபெறவே வெள்ளியது மாற்றோமெத்த துப்புரவாய் சொல்வதற்கு நாவுமில்லை
பதியான வீரமணி தனிலுதித்த பரிதியென்ற வெள்ளியது காணலாமே
6718.
காணவே யின்னமொரு போக்குசொல்வேன் கண்மணியே புலிப்பாணி கவிராஜேந்திரா
ஆணவத்தால் வந்ததொரு கசரோகங்கள் வப்பனே தேனதனில் அனுபானித்தால்
நாணமது வாராமல் ரோகங்கள்நாடாது மேனிவிட்டு நழுகும்பாரு
மாணமருங் கல்வியுள்ள புத்திவானே மார்க்கமுடன் இன்னமொரு மர்மங்கேளே
6719.
கேளப்பா மணியதனை எடுத்துமைந்தா கெவனமுடன் பரணிதனிற் பதனம்பண்ணு
வாளப்பா தேகமது செல்லும்போது வளமுடனே ஐந்தறிவுங் குண்ணுமல்லோ
நாளப்பா வுடலைவிட்டு ஆத்துமந்தான் நீங்கியே போவதற்கு முன்னதாக
பாளப்பா தன்னைத்தான் மறந்துமல்லோ பாழுடலும் போவதற்கு நாளுமுண்டே
6720.
உண்டான காலமது ஒடுக்கந்தன்னில் வுத்தமனே தாகமென்ற கருவுதன்னில்
கொண்டிடவே வீரமென்ற குளிகைதன்னை கொற்றவனே தானிழைத்து நாவில்தீட்ட
தண்டமுடன் செத்தசவம் போலானாலும் தாரணியில் தலையெடுத்து வார்த்தைகூறும்
சண்டமா ருதம்போல இந்தவீரம் சட்டமுடன் உந்தனுக்கு ஓதினேனே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக