பக்கங்கள்

வியாழன், 18 ஜூலை, 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 5931-5940

5931.
காணவே மாசியென்ற திங்களப்பா கருவான ரேவதியாம் மூன்றாம்பாதம்
பூணவே யவர்பிறந்த நாளதாகும் புகழான மார்க்கமது யாதென்றாக்கால்
வேணதொரு டமரகனார் மைந்தரப்பா வேதாந்த அறிவான அனந்தராகும்
தோணவே பிரதிலோம னென்றேசொல்வார் தொல்லுலகில் இவர்போலுஞ் சித்துமுண்டோ
5932.
உண்டான இன்னமொரு மர்மஞ்சொல்வேன் வுத்தமனே நாதாந்தமணியே கேண்மோ
தொண்டனெனும் சித்துமுனி ரிஷிகளுக்கு தோற்றமுள்ள வகப்பேயர் சித்துவாகும்
கண்டவர்கள் விடுவார்கள் சித்துதம்மை காசினியில் உபதேசம் பெற்றசித்து
அண்டமெனும் வையகத்தில் பிறந்தநேர்மை வப்பனே யானுரைப்பேன் சொல்வேன்பாரே
5933.
ஆச்சப்பா கன்னியவள் பெற்றபிள்ளை யவதார புருஷனென்றே செப்பலாகும்
மூச்சடங்கி வெகுகால மிருந்தசித்து முனையான வகப்பேயர் சித்துவாகும்
மாச்சலுடன் இன்னமொரு மார்க்கங்கேளு மகத்தான குதம்பையென்ற சித்துதாமும்
ஏச்சலது வாராமல் தான்பிறந்த எழிலான சித்தினிட மார்க்கங்கேளே
5934.
கேளேதான் ஆடியாந் திங்களப்பா கெவனமுடன் விசாகமென்ற மூன்றாங்காலில்
நானப்பா தான்பிறந்த குதம்பைசித்து நலமுடனே திரிகால பூசைசெய்து
வேளப்பா யாகமது முடித்துமல்லோ வேள்வியுடன் பாலாமிர்தம் உண்டசித்து
ஆளப்பா பெரியோர்கள் நேசம்பெற்று வப்பனே மரப்பொந்தில் இருந்தசித்தே
5935.
சித்தான மாதவமாங் குலத்துதித்த சிறப்பான குதம்பையென்ற சித்துவப்பா 
முத்தான பாலமுர்தம் உண்டுமல்லோ மூதுலகைத் தான்பழித்த சித்துவாகும்
பத்தியுடன் வையகத்தில் நெடுங்காலந்தான் பான்மையுடன் வீற்றிருந்த பரமசித்து
சுத்தியுள்ள திருவாத்தி மரத்தின்கீழே சுந்தரம் போலிருந்ததொரு மாயாசித்தே
5936.
மாயான சித்தல்லோ மகிமைபாரு மகத்தான புலிப்பாணி மைந்தாகேளு
தாயான பாம்பாட்டி சித்தரப்பா தாரணியில் நெடுங்கால மிருந்தசித்து
காயான முப்பழமும் பாலுங்கொண்டு கலியுகத்தில் நெடுநாளாய் இருந்தசித்து
சேயான பாம்பாட்டி சித்துதாமும் சீருலகில் பிறந்ததொரு சித்துதானே
5937.
தானான பாம்பாட்டி பிறந்தமாதம் தாக்கான கார்த்திகையாந் திங்களப்பா
கோனான மிருகசீரிடந் தானாகும் கொற்றவனே மூன்றாங்கால் என்னலாகும்
தேனான அவர்பிறந்த நாள்தானப்பா தேசத்தில் சித்தர்முனி கண்டதுண்டோ
மானான பதினெண்பேர் நூலைப்பார்த்து மார்க்கமுடன் தானறிந்து சொல்லிட்டேனே
5938.
சொல்லவென்றால் பாம்பாட்டி மர்மந்தானும் தோற்றமுடன் ஜோகியென்ற வம்மிஷந்தான்
புல்லவே மசானகுறி யோகியப்பா புகழ்பெரிய குருடனார் பெற்றபிள்ளை
வெல்லவே மாலைசுற்றித் தான்பிறந்த வேதாந்தப் பாம்பாட்டி யென்னலாகும்
நல்லதொரு சித்துமுனி உபதேசங்கள் நலம்பெற்ற பாம்பாட் டியாமே
5939.
பாம்பான இன்னமொரு மார்க்கங்கேளு பண்பான புலிப்பாணி நேசபாசா
தீம்பில்லா காலகண்ட ரிஷியார்தாமும் தீர்க்கமுடன் பிறந்ததொரு திண்ணம்பாரு
தாம்புகழுஞ் சித்திரையாந் திங்களப்பா தாக்கான உத்திராடம் இரண்டாம்பாதம்
மாம்புலமாம் வட்டாரந் தன்னிலப்பா மகத்தான சிவவேடம் பூண்டசித்தே
5940.
பூண்டதொரு காலகண்ட ரிஷியார்தாமும் புகழான பேரண்ட முனிதான்சித்து
ஆண்டகையார் சித்துமுனி மைந்தனுக்கு வன்பான பேரனது பேரனப்பா
தாண்டகையாங் காலகண்ட சித்துவாகும் தரணிபதி சிவயோக சித்துவாகும்
வேண்டியதோர் கருமான மறிந்தசித்து வேதாந்த காலகண்டர் என்னலாமே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக