பக்கங்கள்

சனி, 3 ஆகஸ்ட், 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 5081-5090

5081.
ஆமப்பா வெளிநின்ற மாந்தர்க்கெல்லாம் அப்பனே தோற்றுமடா குரங்குரூபம்
போமப்பா வுன்னின்று பேசும்போது பேரான ரூபமது குரங்குபோலாம்
நாமப்பா வெளிநின்று பேசினாக்கால் நாயகனே நீயுமொரு மனிதனப்பா
தாமப்பா இந்தபடி ஜாலஞ்செய்து தாரணியில் பிழைப்பதுவும் அதிதமாமே
5082.
அதிதமென்ற வித்தையிது யார்தான்காண்பர் அன்பான புத்தியுள்ளான் அறிவான்பாரு
துதிதமுள்ள தருவினது ஜாலப்போக்கு தூய்மையுடன் காணுபவன் சித்தனப்பா
பதிதனிலே இந்தவித்தை செய்துமல்லோ பாலகனே கீர்த்தியது கொண்டுமேதான்
மதிமயங்க எல்லவருங் கண்டுயேங்க மானிலத்தில் எப்போதும் துதிகொள்வாயே
5083.
கொள்ளவே யின்னமொரு மார்க்கம்பாரு கூறுவேன் எனதையர் காலாங்கிநாதர்
உள்ளபடி கண்டதொரு வதிசயங்கள் உத்தமனே யானுமது வெகுவாய்ச் சொல்வேன்
வள்ளலுறை தென்னிலங்கைப் பதியிலப்பா தளமான வதிசயங்கள் கூறுவேன்யான்
தெள்ளுமையாள் துவாரத்தில் இலங்கையப்பா தெளிவான பதிமகிமை கூறுவேனே
5084.
கூறுவேன் இலங்கைபதி மார்க்கந்தன்னை கொற்றவனே புலிப்பாணி மைந்தாகேளு
தேறுபுகழ் நவகண்டந் தன்னிலப்பா தேர்வேந்தர் ராஜர்களின் கோட்டைதன்னில்
வீறுபுகழ் இராவணனார் கோட்டையப்பா விண்ணாழி கோட்டையது விளம்பப்போமோ
மாறுபடாக் கோட்டையது வளப்பஞ்சொல்வேன் மகத்தான வதிசயங்கள் மெத்தவுண்டே
5085.
உண்டான தேசமது இலங்கையப்பா வுத்தமனே வெகுகோடி காலமுன்னே
கண்டேனே குளிகையது பூண்டுகொண்டு கண்கொள்ளாக் கோட்டையது யானுங் கண்டேன்
அண்டர்முனி ராட்சதர்கள் இருக்குங்கோட்டை அரசனது ராவணனார் கோட்டையப்பா
சண்டமா ருதம்போலக் கோட்டையுண்டு சாங்கமுடன் கற்கோட்டைக் கூறொண்ணாதே
5086.
ஒண்ணாது தேசமது நூறுகாதம் உத்தமனே காடுவன பூமியெல்லாம்
அண்ணாந்து பார்க்கவொண்ணா கோட்டையப்பா வழகான கோபுரங்கள் மாபுரங்கள்
சுண்னாம்பு பூமியது வையகந்தான் சுற்றிலும் சாகரமே வலைகள்மோதும்
தண்மையுடன் யெந்நாளும் வாடைக்காற்று சாங்கமுடன் இருப்பதுவுங் கண்டிட்டேனே
5087.
கண்டதொரு தேசமது யிலங்கைநாடு காசினியில் அப்பதிபோ லெங்குமில்லை
உண்டான வதிசயங்கள் மெத்தவுண்டு வுலகத்தில் எங்கேனும் கண்டதுண்டோ
திண்டான கோட்டைக்கு யகழிமத்தி திறளான சாளரங்க வாசலுண்டு
தண்டான வகழிக்குங் கடலுக்குந்தான் தாக்கான வழிதட்டு முண்டேபாரே
5088.
பாரப்பா ஜலமதுவும் போக்குவுண்டு பாங்கான கோட்டைக்கும் அகழிக்குந்தான்
நேரப்பா சாகரமும் வழியுமுண்டு நிலையான இலங்கைபதி கோட்டைதன்னில்
ஆரப்பா வெகுகால மிப்படியேயுண்டு வப்பனே வோடமது போவதுண்டு
கூரப்பா நெடுங்கால மிப்படியேயப்பா கூரான கோட்டையது இருக்குந்தானே
5089.
தானான கோட்டையது வாசல்தன்னில் தார்வேந்தன் மன்னனது செங்கோல்தன்னில்
தேனான மனோன்மணியாள் ரூபம்போல தேர்வேந்தர் சபைமுன்னே தோற்றலாச்சு
மானான வசரீரி வாக்குதானும் மன்னவர்முன் தன்செவிக்குக் கேட்கலாச்சு
கோனான வேந்தனுமே திடுக்கிட்டேங்கி கொற்றவனும் பயந்தல்லோ விழுந்திட்டாரே
5090.
இட்டாரே தேர்வேந்தர் ராசர்தாமும் எழிலான கோட்டைக்குள் மத்தியானம்
பட்டதொரு ராசர்முன் மாண்பரெல்லாம் பயந்தொடுங்கி கண்கலக்க மிட்டபோது
அட்டதிசை தான்கலங்கி சாகரந்தான் வடியோடே யலையதும் மேலேபொங்கி
சட்டமுடன் கோட்டைக்குள் சாகரந்தான் சடுதியிலே பொங்கியது முழுகலாச்சே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக