பக்கங்கள்

வியாழன், 11 ஜூலை, 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 6351-6360

6351.
பாரேதான் கற்பமதைக் கொண்டபோது பாங்குடனே சீனபதி சென்றேன்யானும்
நேரேதான் குளிகையது பூண்டுகொண்டு நெடிதான கடலோரஞ் சென்றுயானும்
சீரேதான் சுவர்ணகிரி இடபாகத்தில் சிறப்புடனே மலையேறி சென்றேன் யானும்
ஆரோதான் கண்டவர்கள் ஆருமில்லை வப்பனே சுவர்ணகிரி கண்டிட்டேனே
6352.
கண்டேனே யின்னமொரு மார்க்கஞ் சொல்வேன் கருவான புலிப்பாணி மைந்தாகேளு
சண்டமா ருதம்போல குளிகைகொண்டு சாங்கமுடன் சுவர்ணகிரி இடபாகத்தில் 
தண்டகா ரணியமதில் அடியேன்தானும் சாங்கமுடன் சமாதிமுகந் தன்னில்நின்றேன்
அண்டர்பிரான் அருளினது கடாட்சத்தாலே வப்பனே கடலோர மமர்ந்தேன்தானே
6353.
தானான வையகத்து மகிமையெல்லாம் தாக்கான சுவர்ணகிரி கடலோரத்தில்
மானான மகத்துவங்கள் அதிகமென்று மார்க்கமுடன் சுந்தரா னந்தரேசர்
தேனான சாத்திரங்கள் பாடியல்லோ தேற்றமுடன் குகைதனிலே வைத்தாரப்பா
கோனான யென்குருவாங் காலாங்கிநாதர் கொற்றவனார் எந்தனுக்குக் கூறினாரே
6354.
கூறியதோர் நூலதுவும் பொய்யாதென்று கொற்றவனே சமாதியென்ற பீடம்நின்று
மீறியே யஷ்டாங்க யோகஞ்சென்று மிக்கான தவநிலையில் நிற்கும்போது
நீறுடை சுந்தரா னந்தரேசர் நிஷ்களங்க சொருபமென்ற சுடரேகொண்டு
மாறுடைய சித்தனைப்போல் வேஷங்கொண்டு மார்க்கமுடன் தரிசனங்கள் தந்திட்டாரே
6355.
தந்தாரே எந்தனுக்குத் தரிசனங்கள் தாக்கான எந்தனையும் ஆரென்றேதான்
சிந்தனையாய் மனதுவந்து கேட்கயானும் சிறப்புடைய காலாங்கி சீஷனென்றேன்
அந்தமுடன் சீனபதி விட்டுயானும் வையனே குளிகையது பூண்டுகொண்டு
விந்தைகளை யறியவென்று இடபாகத்தில் விருப்பமுடன் யான்பணிந்து துதித்திட்டேனே
6356.
துதிக்கையிலே சுந்தரா னந்தரேசர் துப்புரவாய் எந்தனுக்குத் துகளகற்றி
மதிப்புடனே எந்தனையு மனதுவந்து மார்க்கமுடன் கண்டதொரு வினயந்தானும் 
விதிப்புடைய விட்டகுறை இருந்ததாலும் விருப்பமுடன் உந்தமக்கு உபதேசங்கள்
கதிபெறவே ஞானோபதேசஞ் செய்து கருவான கேசரியுந் தருவேன்பாரே
6357.
பாரேதான் புலிப்பாணி மைந்தாகேளு பாங்குடனே சுந்தரா னந்தரேசர் 
சேரேதான் எந்தனுக்குக் குளிகைதந்து தேற்றமுடன் உலகுபதி மகிமையெல்லாம்
நேரேதான் சதாகாலஞ் சீஷனாக நேர்மையுடன் என்மீதில் மனதுவந்து
கூரேதான் கேசரியின் மார்க்கந்தன்னை குறிப்புடனே எந்தனுக்குக் கூறினாரே
6358.
கூறவே புலிப்பாணி மைந்தாகேளு குவலயத்தில் எந்தனுக்கு சீஷமார்க்கம்
தேறவே கண்டல்லோ வாராய்ந்தேதான் தேற்றமுடன் இருப்பதற்கு முறையுஞ்சொல்வேன்
மாறவே தொண்டுசெய்யும் சீஷனுக்கு மகத்தான சன்மார்க்க மேதென்றாக்கால்
ஆறவே விசுவாச வருளும்வேண்டும் வப்பனே அறிவுஜெபம் வேண்டும்பாரே
6359.
வேண்டுமே ஆசையுடன் இன்பம்வேண்டும் விருப்பமுடன் தவமுடனே பொறுமைவேண்டும்
தாண்டவம்போல் குருமொழியின் வணக்கம்வேண்டும் தாரணியில் ஜீவகாருண்யம் வேண்டும்
ஆண்டகையின் பதாம்புயத்தை நண்ணல்வேண்டும் வப்பனே இரக்கமுடன் ஈகைவேண்டும்
தூண்டியதோர் கருமான மின்னஞ்சொல்வேன் துப்புரவாய்த் துகளகற்றி இருக்கநன்றே
6360.
நன்றாக இறவாமல் முயற்சிதேடல் நலமான கற்புடைமை நண்ணல்வேண்டும்
குன்றான கொடியதொரு பாவம்நீக்கி குவலயத்தில் இருப்பவனே சன்மார்க்கன்தான்
தென்றிசையில் அகத்தியர்க்கு நேர்மையாக தேற்றமுடன் உபதேசஞ் செய்யவல்லோன்
நன்றிபுரி வேணாடு வாழுமாண்பர் நலமான சித்துமுனிக் குவமையாச்சே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக