பக்கங்கள்

வியாழன், 11 ஜூலை, 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 6301-6310

6301.
கேட்கவென்றால் அடியேனுங் கானகத்தில் கீர்த்தியுடன் பெண்ணாய்தா னிருந்தோம்
மீட்கமுடன் இரைதேடி போகும்போது மிக்கான கானகத்தில் யாம்திரிந்தோம்
சூட்சமுடன் பாலையென்ற வனத்தில்நாங்கள் சுந்தரமே சித்தொளிவே போகும்போது
ஆட்கள்விட்டு ஒருவரையும் பிரிந்துமல்லோ வையனே கல்லால மரங்கண்டோமே
6302.
கண்டோமே சிவசித்து மாண்பர்தம்மை கைலாச நாதரைப்போல் வேஷங்கொண்டு
உண்டான பொருள்தேடி கற்பமுண்ண உத்தமரே இருவர்தம்மைக் கண்டேன்யானும்
விட்டதொரு வழலையென்ற முப்பூதன்னை விருப்பமுடன் எடுக்கவந்த மாண்பர்தம்மை
சண்டமா ருதம்போல துரத்தியானும் சாங்கமுடன் சீறலது சீறினேனே
6303.
சீறியே யோடுகையில் மாண்பர்தாமும் சிறப்பான கல்லாலின் மரத்தின்பேரில்
மீறியே எனைக்கண்டு பயந்தொடுங்கி மீளாத மரத்தின்மேல் ஏறிநின்றார்
வீரியமாய் அப்பாலே எந்தனைத்தான் விட்டல்லோ கொண்டுமே சிதைத்துப்போட்டார்
கீரியென்னும் விஷமூலி தன்னைத்தானும் கிருபையுடன் எந்தனுக்குக் கொடுக்கலாச்சே
6304.
கொடுக்கவே என்சேனை பிணையிலொன்று கொப்பெனவே நானிறந்த பாவனத்தை
அடுத்துமே கண்டல்லோ வாலோசித்து ஐயனே குருமூலி தேடிவந்து
அடுத்திருந்த எந்தன்முன் வந்துநின்று பாங்கான மூலிதனை முகத்தில்வைக்க
நடுத்தலையில் வில்லறுந்த நாணிபோலே நாதனே உயிர்கொண்டு வந்திட்டேனே
6305.
வந்தேனே என்பிணையுங் கூடியல்லோ வளமான மரம்விட்டு வந்தபோது
சிந்தனையாய் மூலிதனை விட்டகற்றி சீறியே நாமிருவர் வந்தபின்பு
பந்தமுள்ள சிவமாண்பர் இருவர்தாமும் பட்சமுடன் கல்லாலின் மரத்தைவிட்டு
சந்தோஷ மாகியல்லோ இறங்கிமாண்பர் சட்டமுடன் மூலிதனைத் தொட்டிட்டாரே
6306.
தொட்டிட்ட மூலியது எந்தன்நாதா துடர்ந்துமே கைதனையே பற்றியல்லோ
விட்டு விடா தவர்கரத்தை பிடித்துமல்லோ வீறான நாமிருக்குங் கானகத்தில்
சட்டமுடன் கரந்தனையே பற்றியல்லோ சாங்கமுடன் தானிருக்குங் காலந்தன்னில்
விட்டகுறை இருந்ததொரு புண்ணியத்தால் வீரமுடன் விரல்தனை துண்டிட்டாரே
6307.
துண்டிடவே கரமதுவும் எந்தன்பக்கல் துப்புரவாய் விஷமூலி வேகத்தாலே
கண்டிதமாய் அவர்செய்த பாவத்தாலே கர்த்தாவே கரமதுவும் வந்துதென்று
திண்டிரை சூழ்வையகத்தில் சமாதிபூண்ட திரளான வெந்தன்குரு தீர்க்கநாதா
கொண்டுவந்தேன் உந்தமக்கு சாட்சியாக கொற்றவனே கதியென்ன யென்னலாச்சே
6308.
யாச்சென்று சொல்லுகையில் ரிஷியார்தாமும் அங்ஙனவே சர்ப்பமதுக் கோதுவார்பார்
மூச்சடங்கி இருந்ததொரு சர்ப்பந்தன்னை முசியாமல் உயிர்மூலி தான்கொடுத்து
பாச்சலுடன் கானகத்தில் பின்னுமல்லோ பட்சமுடன் இருபேரும் வந்திட்டார்கள்
ஆச்சரிய மானதொரு விஷமூலிதன்னால் வப்பனே பிழைத்ததுவும் அருமைதானே
6309.
தானான சர்க்குருவின் கடாட்சத்தாலும் தாக்கான மனோன்மணியாள் கிருபையாலும்
கோனான மகதேவர் கிருபையாலும் கூர்மையுடன் பிழைத்ததுவும் புண்ணியந்தான்
தேனான சிவமாண்பர் கரமறிந்து தீர்க்கமுடன் வந்ததுவும் பாவமாச்சு
மானான பாவத்துக் கிடங்கொடாமல் மகத்தான சாபமதை நீக்குவீரே
6310.
நீக்கினால் வெகுகோடி புண்ணியந்தான் நிட்களங்க மானதொரு மாண்பருக்கு
ஆக்கமுடன் கரந்தனையே ஒட்டிக்கொள்ள வப்பனே மூலியது கொண்டுவந்து
நோக்கமுடன் தான்கொடுத்து வனுப்பினாக்கால் நெடிதான விரலதுவும் விருட்சந்தன்னில்
பாக்களவு பிறந்ததொரு கதையைப்போலே பாங்கான விரலதுவும் ஒட்டும்பாரே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக