பக்கங்கள்

ஞாயிறு, 21 ஜூலை, 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 5781-5790

5781.
ஆமப்பா புலிப்பாணி மைந்தாகேளு வப்பனே யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன்
போமப்பா நந்தியுட மார்க்கந்தன்னை புகலுகிறேன் வயததுவும் ஏதென்றாக்கால்
நாமப்பா வயததுவும் எழுநூறாண்டு நலமான வெகுகால மிருந்தசித்து
வேரப்பா சமாதிமுகங் கண்டசித்து வேதாந்த நந்தியென்று சொல்லலாச்சே
5782.
சொல்லவென்றால் நாவில்லை பாவுமில்லை சுந்தரனார் யுகங்கடந்த நந்திமூர்த்தி
வெல்லவே மலையடியாம் வாரந்தன்னில் வேண்டியே சமாதிமுக மிருந்தசித்து
புல்லவே சீஷவர்க்க மில்லாமற்றான் பூதலத்தில் வெகுநாளாய் இருந்தார்தாமும்
நல்லதொரு தேவதா ஸ்தலங்கள்தன்னில் நலமுடனே நந்தியென்ற பேருண்டாச்சே
5783.
உண்டாச்சு சித்துமுனி பாலனுக்கு வுற்றதொரு நந்திமுகந் தாமாச்சு
கண்டதொரு மாண்பரெல்லாம் ஆலயத்தில் கருத்தினிலே முன்னின்ற நந்தியென்று
அண்டர்முனி ராட்சதரும் ரிஷிகள்தாமும் அந்தர துந்துபிமுதலுந் தேவரானோர்
மண்டலத்தில் தேவதா ஸ்தலங்கள்தன்னில் மகத்தான நந்தியென்று மதித்திட்டாரே
5784.
மதிக்கவே இன்னமொரு மார்க்கங்கேளு மகத்தான புலஸ்தியரின் வண்மைசொல்வேன்
துதிக்கவே வகஸ்தியனார் வாசம்பெற்ற துடியான புலஸ்தியனார் என்னலாகும்
விதிப்படியே கமலமுனி கோத்திரத்தில் வித்தகராய் வந்துதித்த முனிவர்தாமும்
கதிபெறவே யகஸ்தியனார் பாகம்பெற்று காசினியில் வந்துதித்த சித்துமாச்சே
5785.
ஆச்சப்பா புலஸ்தியரின் வயதேதென்றால் வப்பனே யறுநூற்று அறுபதாகும்
மூச்சடங்கி பிரணவத்தை மாறிமாறி மூதுலகில் வெகுகால மிருந்தசித்து
பேச்சசி யாமாவின் சித்துவப்பா பேரின்ப நிலைதனையே துறந்தசித்து
நீச்சனெனும் பஞ்சமரோ டிருந்தசித்து நெடுங்கால வையகத்து சித்துமாச்சே
5786.
சித்தான புலஸ்தியருஞ் சமாதிக்கேக சிறப்பான தேரணமா முனிவர்தம்மை
பத்தியுடன் சீஷவர்க்கம் கொண்டுமல்லோ பாருலகில் சமாதிக் கேகவென்று
முத்திபெற சின்மயத்தை மனதிலெண்ணி மூதுலகில் சமாதிக்கு செல்கவென்று
சத்தியமாய் பவக்கடலை யொழித்துமல்லோ சட்டமுடன் சமாதிமுக மேகினாரே
5787.
ஏகவே வையகத்தில் சமாதிதன்னில் எழிலாக முப்பது வாண்டுமட்டும்
போகமென்னும் அத்வீத நிலையில்நின்று பொங்கமுடன் தானிருந்த மாயாசித்து
பாகமுடன் தேரணமா முனிவர்தன்னால் பாருலகில் மறுபடியும் வந்தசித்து
சாகமது வாராமல் அறுநூற்றுச்சொச்சம் சாங்கமுடன் வையகத்தில் இருந்தார்பாரே
5788.
பாரேதான் யின்னமொரு வயனஞ்சொல்வேன் பண்பான எந்தனது நேசபாலா
சீரேதான் வேதமென்ற வியாசரப்பா சிறப்புடனே வெகுகாலங் கடந்தசித்து
கோரமென்ற வயததுவும் ஆயிரத்துச்சொச்சம் குவலயத்தில் வேதமதை யறிந்தசித்து
தீரமுடன் நூலாதி நூல்களெல்லாம் திறைகடல் போலுண்டதொரு சித்துகாணே
5789.
காணவே வனாந்திரங்கள் குகைகள்நாடு கருவான மலையாறு குண்ணுதானும்
வேணதொரு வண்டர்முனி கூட்டத்தார்கள் வெளிகாணா காடுமுதல் உறைந்தசித்து
நீணவே சமயமென்ற மார்க்கந்தன்னை நேர்மையுடன் துகைபாடு செய்தசித்து
மாணமருங் கல்விதனி லுறைந்தசித்து மகத்தான மாண்பருக்கு உகந்தசித்தே
5790.
மாண்பான வையகத்து ஜனங்களுக்கு மார்க்கமுடன் வேதமதை யோதும்சித்து
ஆண்மையுடன் சாத்திரங்கள் புராணமெல்லாம் அவரவர்க்கு உகந்தபடி செய்துவைத்தேன்
தாண்மைபெற சைவாதி சமயமெல்லாம் தாரணியில் கொடிநாட்டி இருந்தசித்து
நீண்மையுடன் காயாதி கற்பங்கொண்டு நெடுங்கால மிருந்ததொரு தவசியாச்சே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக